Aug 11, 2019

நேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு?

அஜித் ஏன் திடீர்னு ரிமேக் பண்ணாருனு ஒரு சந்தேகம் வந்துச்சு.

Image result for nerkonda paarvai

சந்தேகத்த சுக்குநூறு ஆக்கி தனது சமூக பார்வையை நேர்கொண்ட பார்வையில நிருபிச்சு இருக்காரு. இந்த படம் பிங் படம் மாதிரி இருக்கா இல்லையா என்பது விவாதம் கிடையாது. அதையும் தாண்டி இந்த படம் இப்போதைய சூழ்நிலைக்கு தேவையா இல்லையா என்பது தான் கேள்வி.

கேள்விக்கு ஆணித்தரமான பதில்- ஆம் ரொம்ப முக்கியமான தேவையான படம்.

யாருக்கு, என்பது அடுத்த கேள்வி?

எல்லாருக்கும் தானே?

நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை மாஸ் ஹீரோ அஜித் தேர்வு செய்ததே அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக தானே. ஆனால், படம் பார்த்து சிலர் கூறும் கருத்து, ரொம்ப அச்சத்தை ஊட்டுகிறது.

"பெண்களுக்கான படம்"

"முக்கியமா பெண்கள் பார்த்து திருந்தனும்."

"சிட்டி கேர்ல்ஸ் பாக்கனும்."

"யார் கூப்டாலும் போயிட கூடாது."

படம் என்ன சொல்ல வரது என்பதை ஒரு துளிகூட புரிந்து கொள்ளவில்லை என்றால் அப்பரம்  

இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு எடுக்கனும்?

படம் தோல்வி அடைந்திருந்தால் கூட இவ்வளவு பயம் வந்திருக்காது. எல்லாரும் பார்த்துவிட்டு, புரிந்து கொள்ளாமல் மறுபடியும் அத சாக்கடை எண்ணத்தோடு, 'என் தலயும் நான் நினைச்ச மாதிரியே சொல்லிட்டாரு' என்று பெருமிதம் அடித்து கொண்டு வரும்போது தான் பயமா இருக்கு. பத்து அடி முன்னாடி சமுதாயம் காலடி வைக்க, இது போன்ற கீழ்த்தனமான கருத்து வைத்து இருப்போர் நம்மை பாதாளத்தில் தள்ளிவிடுவார்கள் போல. 


 40, 50 வயதை கடந்தவர்கள் அதிகமாய்  இந்த மாதிரி கருத்தை ஆதரிக்கிறார்கள் என்பதுபோல் தோன்றுகிறது. இளையர்கள் ஓரளவுக்கு அப்படி இல்லை என்று மனம் ஆறுதல் அடைந்தாலும், வீடியோவில் நிறைய பெண்களுக்கு ஏன் இந்த மாதிரி கருத்து உதித்தது?


படம் ஒரு மனிதனை மூன்று மணி நேரத்தில் மாற்றிவிடாது. ஆனால், சிந்திக்க வைக்கும். அப்படி சிந்திக்க வைத்ததால் தான் இக்கட்டுரையே. கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் கோபம். பெண்களுக்கு மட்டும் அல்ல, மாற்று திறனாளி, திருநங்கை, LGBTQ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என அனைவரின் முன்னேற்றத்திற்கு பல நாடுகளில் சட்டங்கள் மாற்றபட்டு வருகின்றன. இப்படி முன்னோக்கி நமது நேர்கொண்ட பார்வை நல்லதுக்கே போய்கொண்டு இருக்க, நமக்கு குறுகிய பார்வை எதுக்கு?


நோ மின்ஸ் நோ.

மூன்று வார்த்தைகள் என்றாலும், புரிந்து கொள்ள தான் எவ்வளவு கஷ்டம்? 

Apr 2, 2019

குறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்


குறியீடு சினிமா.



“பின்னாடி நிக்கிற ஆயம்மா வரைக்கும் நல்ல நடிக்கிறாங்க” இந்த சின்ன பையன் ஒவ்வொரு வார்த்தையும் புலங்காகிதம் அடைஞ்சு உணர்ச்சி போங்க பேசுறாரு.

அந்த 7வது காட்சில 5வது ஷாட்ல ஒரு பச்சை கலர் துணி ஏன் காத்துல ஆடுது தெரியுமா? இப்படினு ஆரம்பிச்சு குறியீடு, metaphor, வாழ்வின் ரகிசயம், அந்த பச்சை கலர்ல global warming பத்தி சொல்றாருனு சொல்லி என்னை போன்ற வெகுஜனங்ககிட்ட, தான் எவ்வளவு பெரிய அறிவு ஜீவி என காட்டி கொள்ளும் ஒரு கூட்டம் இருக்கு.

அது தான் சினிமா ரசிக்கும் அளவுகோல் என்றால் நான் சாதாரணமான ரசிகையாகவே இருந்துட்டு போயிடுறேன்.

குறீயிடு சினிமாவின் இன்னொரு அபத்தம் அபாயம் ஒன்னு இருக்கு. இதுக்கு முன்னாடி வந்த எந்த படமும் உருபடி இல்லை என சொல்ல வைப்பதே.

ஒரு மண்ணும் குறீயிடு இல்லாமல் ஜெயித்த “முதல் மரியாதை” படத்துல சிவாஜி ராதாவ பாத்து,

“உனக்கு வயசு இருக்கு. பொளப்ப கெடுத்துக்காத”னு சொல்லிட்டு நடந்து போகும்போது,
நான் தேம்பி தேம்பி அழுது இருக்கேன். அப்போ எனக்கு வயசு எட்டு தான். என்ன புரிஞ்சி இருக்கும் எனக்கு? இல்ல புரியாம தான் அழுதேனு தெரியல. ஆனா, “இந்த அங்கிளும் ஆண்ட்டியும் ஒன்னு சேரனும்” அப்படினு நினைச்சுது மட்டும் ஞாபகம் இருக்கு.

Plastic bagகளை தரையில் சிதறாமல் எடுத்த படம் தான் “மேற்கு தொடரச்சி மலை”. அதுல மலை ஏறும் ஒருவர் ஒரு சின்ன கல்லை எடுத்து பையில் போட்டு நடப்பார். அதுக்கு விளக்கம் கொடுக்கும்போது, “இந்த கல்லு தான் எங்க நம்பிக்கை. உயிரோடு மல உச்சிய அடையனும்னு இந்த மரத்த வேண்டிகிட்டு இந்த கல்ல இங்க போடுவோம்”

இக்காட்சிய பார்க்கும்போது என்னை அறியாமலேயே ஒரு மாதிரி போனது மனசு.

நான் பார்த்து ரசிக்கும் சினிமா என் மனசையும் அறிவையும் பக்குவப்படுத்தனும்.

“உனக்கு இது கூட தெரியலையானு” மத்தவங்கள புண்படுத்தகூடாது.
அப்படி தான் சினிமா எடுக்கனும்னா, எடுத்துக்கோ.

அப்படி தான் சினிமாவ ரசிக்கனும்னா, ரசிச்சிக்கோ.

குறியீடு சினிமா, எங்கள மஞ்ச துணில சுத்தி ரயில் வண்டில தூக்கிபோட்ட குழந்தையாகவே வாழ்ந்து கொள்கிறோம்.

Jan 21, 2019

"காவடி பாக்க போவோம்."- தைப்பூசமும் பரோட்டாவும்

Farrer park ரயில் நிலையம் அருகே இருக்கும் பெருமாள் கோயிலிருந்து Tank Road முருகன் கோயில் வரை தைப்பூசம் ஊர்வலம் போகும் சிங்கப்பூரில். விமர்சையாக நடைபெறும் பல திருவிழாக்களில் இதுவும் ஒன்று. இன்று பொது விடுமுறை இல்லையெனிலும், பலர் லீவு எடுத்து இருப்பார்கள். சிலர் காவடி செலுத்தியபிறகு, வேலைக்கு அப்பரம் செல்வார்கள்.



எனக்கு இன்னும் விடுமுறை (காலேஜ் masters prog semester 1 இன்னும் 2 வாரங்களில்). சரி போய் காவேடி பாக்க போவோம் என்று கிளம்பினேன். காலையில் 9 மணி இருக்கும். வீட்டு பக்கத்து தெருவிலிருக்கும் பரோட்டா கடைக்கு சென்றேன்.

கடைக்காரிடம், "அங்கிள் ஒரு முட்ட பரோட்டா. ஒரு கோப்பி."

அங்கிள் ஒரு மாதிரி என்னை பார்த்து முறைத்தார்.

**********

ஒரு காலம் வரை பலநாள் விரதம் இருந்து, விடியற்காலையில் கோயிலுக்கு போய் பால் காவடி தூக்கி கொண்டு 4கிலோ மீட்டர் நடந்து, கூட்ட நெரிசலில் 3 மணி நேரம் நின்று வழிபாடு செய்து கொண்டிருந்தோம். (குடும்பத்தில் அனைவரும்)

அப்பரம் தான் புரிந்தது- வாய் வேற சிஸ்ட்டம். வழிபாடு வேற சிஸ்ட்டம்.

நம்ம என்ன பண்றோம்?

கடவுளை பார்த்து புனிதம்னு சொல்லி tag பண்றோம்.

பிரியாணியை பார்த்தும் 'வாவ்', "this is divine"னு சொல்றோம்.

சாமி கும்பிடும்போது எப்படி இன்னொரு விஷயம் புனிதமற்று போகுது?


சரி, அசைவம் சாப்பிடாம இருந்தாலும், திண்ண வாயும் நாக்கும் ஒன்றே தானே. இதுக்கென்று சொல்லாமலே லிவிங்ஸ்டன் மாதிரி நாக்கை அறுத்து போட்டுவிட்டா போகிறோம்?

இந்த அறிவு வந்த பிறகு, கோயிலுக்கு போகும்போது சைவமா இருக்கனும் விரதம் இருக்கனும் concept எல்லாம் ரொம்பவே குறைச்சாச்சு.

தைப்பூசம் அன்று தான் போய் பால் ஊத்தினால் தான் முருகன் நம்ம பக்கம் எட்டி பார்ப்பார் என்றெல்லாம் இல்லை. அம்மாவிடம் நான் சொன்னது இது தான்,

"தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும். அப்படி தான் இதுவும். நம்ம உடல் சக்திக்கு அப்பரம் தான் பக்தியெல்லாம். நடக்க முடியாம நடந்து போவத விட நிம்மதியா ரெண்டு நாள் முன்னாடி போய் பால ஊத்திட்டு வந்திடுவோம்."

************************

அங்கிள் பரோட்டாவை என் மேசையில் வைத்தார்.

நான், "அங்கிள், கோப்பியும் இப்பவே கொண்டு வந்திடுங்க"

ஆறுமுகம் மாதிரி அவருக்கு முறைத்த முகம் போல.

*******************

சாப்பிட்டு முடித்துவிட்டு காலை 10 மணி அளவில் பெருமாள் கோயில் அருகே கொஞ்சம் நேரம் நின்று காவடி பார்த்தேன். சில வருஷத்துக்கு முன்னாடி காலை முதல் இரவு வரை வரிசையாய் ஏகப்பட்ட காவடிகள் போகும். நான் நின்று பார்த்து கொண்டிருந்த போது, 7 காவடிக்கு மேல ஒன்னும் பாக்கல முடியல.

"டேய் டெம்போ எல்லாம் வச்சு கடத்தியிருக்கோம்யா" மாதிரி

"டேய் இதுக்காக தான் டா காலையில் எழுந்து அங்கிள்கிட்ட முறைப்பு தரிசனம் வாங்கிகிட்டு வந்திருக்கேன். எங்க டா காவடி?" என்று நினைத்துகொண்டு, சற்று தூரம் நடந்து போய் பார்ப்போம் என நடக்க ஆரம்பித்தேன்.

போகும் வழியில்,  முஸ்தபா செண்டர் சாலையை பார்த்தேன்.


பரவசம் நிலையை அடைந்தேன். இப்படி காலியா இருந்து நான் பார்த்ததே இல்லை.

முருகா, உன் அப்பனின் திருவிளையாடலில் இதுவும் ஒன்றா?

சற்று தூரத்தில், இலவசம் டீ, மோர், கேசரி கொடுத்து கொண்டு இருந்தார்கள். வெயில் பொளந்து கட்டியது. அங்காங்கே அமைக்கப்பட்டிருந்த 'இசை கூடாரத்தில்' மேள தாளம் இசை முழுங்கினார்கள். காவடி தூக்கியவர்களுக்கு உற்சாகமாக இருந்தது.


டோபி காட் அருகே நின்றேன். பார்த்த அதே 7 காவடிகள் நகர்ந்து வந்தன. அட இவ்வளவு தானா? வெயில் மண்டையை உரித்தது.

25 வருஷத்துக்கு முன்னாடி, நான் சின்ன பிள்ளையாய் இருக்கும்போது, 'காவடி பாக்க போவோம்' என அப்பா அம்மா சொல்லி என்னை அழைத்து போவார்கள் மாலை பொழுதில்.  எனக்கு தெரிஞ்சு 'காவடி பாக்க போறது' என்பது ரொம்ப கோலாகலமான ஒரு விஷயம். இப்போ அது குறைஞ்சிகிட்டே வருதே என்று எண்ணியவாறு ரயில் ஏறினேன் வீட்டிற்கு.