Apr 8, 2013

சென்னையில் ஒரு கேடி பில்லாவும் பரதேசியும்.

இந்த வார இறுதி நாட்களில், 3 படங்கள்.

1) சென்னையில் ஒரு நாள்

ஏற்கனவே வந்த மலையாள படத்தை பார்த்துவிட்டதால், இந்த படம் அவ்வளவு புதிதாக தெரியவில்லை. அந்த படத்தில் இருந்த ஒரு சில 'மேஜிக்' இதில் இல்லை.

இருந்தாலும், சில காட்சிகள் ரொம்பவே நல்லா இருந்துச்சு. அதிலும் அந்த கார், பெரிய லாரி மோதி கொள்ளாமல் பயங்கரமாய் சர்சர் என்று வாகனம் போன காட்சிகள் எல்லாம் சூப்பர்! நடித்த அனைவருமே ரொம்ப நல்ல செய்து இருந்தாங்க.

தமிழ் டாக்கிஸ் யூடியுப் விமர்சனம் சொன்னதுபோல், "சேரன் நடிக்குறார்னு பயந்து படத்த பாக்காம போயிடாதீங்க. அவர் ரொம்ப நல்லா நடித்து இருந்தார்."

இதே மாதிரி நல்ல கதாபாத்திரங்களில் நடிங்க சார்! உங்கள எல்லாருக்கும் பிடிக்கும்.

2) கேடி பில்லா கிள்ளாடி ரங்கா- சூப்பர் ஹிட் படம் என்றார்கள்! 

படத்தை பார்த்துவிட்டு, 'இது ஒன்னும் அவ்வளவு பெரிய காமெடி இல்ல' என்று தான் தோன்றியது. ஒரு கட்டத்தில் செம கடுப்பாய் வந்தது. சிரிப்பே வராமல் எவ்வளவு நேரம் தான் நானும் 'இந்தா காமெடி வந்துடும். அந்தா காமெடி வந்துடும்'னு எதிர்பார்க்குறது?

சும்மா ஃபேஸ்புக் பக்கங்களின் தலைப்பின் சாயலில் காமெடி டயலாக் சொன்னால், சிரிப்பு வருமா?

இதை காமெடி படம் என்றால், உள்ளத்தை அளித்தா போன்ற படத்தை எல்லாம் என்ன சொல்வீங்க!!!???

the convent boy விமல் அவர்களே, நடிப்பு வந்தால் அதை கொஞ்சமாவது எடுத்து பாக்கெட்-ல போட்டுக்குங்க. தூர தூக்கி போடாதீங்க.

சிவா கார்த்திகேயா, பெண்களை கிண்டல் பண்ணி சுண்டல் சாப்பிடும் இந்த கதாபாத்திரம் உனக்கு இனிமேல் வேண்டாம்ய்யா!!! இப்படி பேசினால் தான், கை தட்டல் கிடைக்கும்னு நிறைய பேர் சொல்லுவாங்க. கை தட்டல் வாங்க, வேற நல்ல வழியெல்லாம் இருக்குது தல!

சூரி, சந்தானத்துக்கு வந்த நிலை உங்களுக்கு வர வாய்ப்பு இருக்கு. டபுள் மீனிங் வசனம் பேசினால் அடுத்த 'சந்தானம்' நீங்க தான் பாஸ்!!

இயக்குனரே,................. சரி விடுங்க. இந்த அரையாண்டு பரிட்சைல என்னை பொருத்தவரை பாஸ் ஆகல. அடுத்த முழு ஆண்டு பரிட்சைலவாது நல்லா வர முயற்சி பண்ணுங்க.

அப்பரம் யுவன பத்தி சொல்ல மறந்துட்டேனே!!! சரி அது மறந்ததாகவே இருக்கட்டும்.

3) பரதேசி.

முதலில் இப்படத்தை பார்க்க அவ்வளவு ஆர்வம் இல்லை. அவரின் 'நான் கடவுள்' படம் கொடுத்த 'பயம்'. நம்ம வாழ்க்கையே கொஞ்சம் பரதேசி நிலைமைல தான் போயிகிட்டு இருக்கு. அதுல இந்த படத்த வேற பாக்கனுமா-னு யோசித்தேன். படத்தை பார்த்தேன். அட, பரவாயில்ல கொஞ்ச நல்லா தான் இருக்கு.

நிறைய காட்சிகளில், நாம் நமது வாழ்க்கையில் நடப்பவற்றை பார்க்க முடிந்தது.

கஷ்டப்பட்டு படிச்சு, பட்டம் வாங்கி, வேலைக்கு போகும்போது தெரிவதில்லை நாமும் நவீன பரதேசிகள் என்று.

அடிமையாக்கப்படுவோம்
வீட்டை மறந்து
சில நேரங்களில்
அனாதையாக்கப்படுவோம்.

 என்ன தான் உடல் நலம் சரியில்லை என்றாலும் வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நாட்கள் எல்லாம் உண்டு. மருந்து செலவுக்கும் முதலாளிக்கும் பயந்து தன்ஷிகா கொஞ்சம் கொஞ்சமாய் சாகும் காட்சியில் உணர்ந்தேன் நானும் ஒரு 'பரதேசி' என்று.

தன்மானத்தை புதைத்தோம்
வருமானத்திற்காக!

இந்த மாதிரி படம் முழுவதும் இன்றைய சூழலுக்கு ஒற்றுமை இருந்தது. கடைசியில் அதர்வா, வேதிகாவை பார்த்து, "இந்த நரகத்துக்கள்ள விழுந்துட்டியே?" என்று வாய்விட்டு அழும் காட்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையை நினைச்சு நாம் அழுவதைபோலவே இருந்ததுச்சு.

நடிப்பு என்ற வகையில் எல்லாருமே நல்லா செய்து இருந்தாங்க. அதர்வாவின் பிச்சுபோட்ட பரோட்டா தமிழ் தான் ஆங்காங்கே தலை தூக்கியது. இருந்தாலும், நல்லாவே நடித்து இருந்தார்.

No comments: