Jan 21, 2019

"காவடி பாக்க போவோம்."- தைப்பூசமும் பரோட்டாவும்

Farrer park ரயில் நிலையம் அருகே இருக்கும் பெருமாள் கோயிலிருந்து Tank Road முருகன் கோயில் வரை தைப்பூசம் ஊர்வலம் போகும் சிங்கப்பூரில். விமர்சையாக நடைபெறும் பல திருவிழாக்களில் இதுவும் ஒன்று. இன்று பொது விடுமுறை இல்லையெனிலும், பலர் லீவு எடுத்து இருப்பார்கள். சிலர் காவடி செலுத்தியபிறகு, வேலைக்கு அப்பரம் செல்வார்கள்.



எனக்கு இன்னும் விடுமுறை (காலேஜ் masters prog semester 1 இன்னும் 2 வாரங்களில்). சரி போய் காவேடி பாக்க போவோம் என்று கிளம்பினேன். காலையில் 9 மணி இருக்கும். வீட்டு பக்கத்து தெருவிலிருக்கும் பரோட்டா கடைக்கு சென்றேன்.

கடைக்காரிடம், "அங்கிள் ஒரு முட்ட பரோட்டா. ஒரு கோப்பி."

அங்கிள் ஒரு மாதிரி என்னை பார்த்து முறைத்தார்.

**********

ஒரு காலம் வரை பலநாள் விரதம் இருந்து, விடியற்காலையில் கோயிலுக்கு போய் பால் காவடி தூக்கி கொண்டு 4கிலோ மீட்டர் நடந்து, கூட்ட நெரிசலில் 3 மணி நேரம் நின்று வழிபாடு செய்து கொண்டிருந்தோம். (குடும்பத்தில் அனைவரும்)

அப்பரம் தான் புரிந்தது- வாய் வேற சிஸ்ட்டம். வழிபாடு வேற சிஸ்ட்டம்.

நம்ம என்ன பண்றோம்?

கடவுளை பார்த்து புனிதம்னு சொல்லி tag பண்றோம்.

பிரியாணியை பார்த்தும் 'வாவ்', "this is divine"னு சொல்றோம்.

சாமி கும்பிடும்போது எப்படி இன்னொரு விஷயம் புனிதமற்று போகுது?


சரி, அசைவம் சாப்பிடாம இருந்தாலும், திண்ண வாயும் நாக்கும் ஒன்றே தானே. இதுக்கென்று சொல்லாமலே லிவிங்ஸ்டன் மாதிரி நாக்கை அறுத்து போட்டுவிட்டா போகிறோம்?

இந்த அறிவு வந்த பிறகு, கோயிலுக்கு போகும்போது சைவமா இருக்கனும் விரதம் இருக்கனும் concept எல்லாம் ரொம்பவே குறைச்சாச்சு.

தைப்பூசம் அன்று தான் போய் பால் ஊத்தினால் தான் முருகன் நம்ம பக்கம் எட்டி பார்ப்பார் என்றெல்லாம் இல்லை. அம்மாவிடம் நான் சொன்னது இது தான்,

"தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும். அப்படி தான் இதுவும். நம்ம உடல் சக்திக்கு அப்பரம் தான் பக்தியெல்லாம். நடக்க முடியாம நடந்து போவத விட நிம்மதியா ரெண்டு நாள் முன்னாடி போய் பால ஊத்திட்டு வந்திடுவோம்."

************************

அங்கிள் பரோட்டாவை என் மேசையில் வைத்தார்.

நான், "அங்கிள், கோப்பியும் இப்பவே கொண்டு வந்திடுங்க"

ஆறுமுகம் மாதிரி அவருக்கு முறைத்த முகம் போல.

*******************

சாப்பிட்டு முடித்துவிட்டு காலை 10 மணி அளவில் பெருமாள் கோயில் அருகே கொஞ்சம் நேரம் நின்று காவடி பார்த்தேன். சில வருஷத்துக்கு முன்னாடி காலை முதல் இரவு வரை வரிசையாய் ஏகப்பட்ட காவடிகள் போகும். நான் நின்று பார்த்து கொண்டிருந்த போது, 7 காவடிக்கு மேல ஒன்னும் பாக்கல முடியல.

"டேய் டெம்போ எல்லாம் வச்சு கடத்தியிருக்கோம்யா" மாதிரி

"டேய் இதுக்காக தான் டா காலையில் எழுந்து அங்கிள்கிட்ட முறைப்பு தரிசனம் வாங்கிகிட்டு வந்திருக்கேன். எங்க டா காவடி?" என்று நினைத்துகொண்டு, சற்று தூரம் நடந்து போய் பார்ப்போம் என நடக்க ஆரம்பித்தேன்.

போகும் வழியில்,  முஸ்தபா செண்டர் சாலையை பார்த்தேன்.


பரவசம் நிலையை அடைந்தேன். இப்படி காலியா இருந்து நான் பார்த்ததே இல்லை.

முருகா, உன் அப்பனின் திருவிளையாடலில் இதுவும் ஒன்றா?

சற்று தூரத்தில், இலவசம் டீ, மோர், கேசரி கொடுத்து கொண்டு இருந்தார்கள். வெயில் பொளந்து கட்டியது. அங்காங்கே அமைக்கப்பட்டிருந்த 'இசை கூடாரத்தில்' மேள தாளம் இசை முழுங்கினார்கள். காவடி தூக்கியவர்களுக்கு உற்சாகமாக இருந்தது.


டோபி காட் அருகே நின்றேன். பார்த்த அதே 7 காவடிகள் நகர்ந்து வந்தன. அட இவ்வளவு தானா? வெயில் மண்டையை உரித்தது.

25 வருஷத்துக்கு முன்னாடி, நான் சின்ன பிள்ளையாய் இருக்கும்போது, 'காவடி பாக்க போவோம்' என அப்பா அம்மா சொல்லி என்னை அழைத்து போவார்கள் மாலை பொழுதில்.  எனக்கு தெரிஞ்சு 'காவடி பாக்க போறது' என்பது ரொம்ப கோலாகலமான ஒரு விஷயம். இப்போ அது குறைஞ்சிகிட்டே வருதே என்று எண்ணியவாறு ரயில் ஏறினேன் வீட்டிற்கு.