Jun 21, 2018

மயிர் தான் பொண்ணுக்கு அழகா?



முடி, கூந்தல், மயிர்- எப்படி 'தலைமுடிக்கான'  சொல் எக்கசக்கமா இருக்குதோ, அதே மாதிரி ஒரு காலத்துல நமக்கும் எக்கசக்கமா முடி இருந்திருக்கும். வேலைக்கு போற வயசு வரைக்கும் முடிய பத்தி அவ்வளவு கவலைப்பட்டு இருக்க மாட்டோம். ஆனா, வேலை, பணம், உடல் ஆரோக்கியம், இப்படி  நமக்கு தெரியாமலேயே நம்ம ஒரு 'சமூக விரோதி' வந்து தாக்கிட்டு போயிடும்.

ஒரு படத்துல, செந்தில் சொல்வாரே, " இந்த இடம் தான் thrillingஆன இடம். மனச தேத்திக்குங்க. பயந்துடாதீங்க'' அந்த மாதிரி, 30 வயசுக்குள்ளயே பாத்தா, நம்மள பதற வைக்குற மாதிரி, நமக்கு முடி கொட்டும் பிரச்சனை வந்திடும். குறிப்பா, இது பெண்களுக்கு நடக்கும்போது தான், இன்னும் அதிர்ச்சி ஆவங்க.

2017. வருஷம் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ல இத கவனிச்சேன். கண்ணாடி முன்னாடி நின்னு, முடி சீவும்போது, தலையில சில இடம் காலியா போவத. சரி, இப்படிக்கா சீவி பாத்தா, இன்னும் மோசமா போகுது. அப்போ தான் மனசு 'பகிர்'னு இருந்துச்சு. நமக்கு சொட்டை விழுந்திடுச்சா?

மெத்தையில உட்கார்ந்து என்ன டா நடக்குதுனு யோசிச்சா, கண்ணுல கண்ணீர் வருதே தவிர யோசிக்க முடியல. நமக்கு உடல பிரச்சனை வந்தா என்ன பண்ணுவோம்?

அதே தான்.

நானும் அந்த முட்டாள்தனத்த பண்ணினேன். கூகல் பக்கம் போனேன்.  கூகல போய், hair fall அப்படினு ஆரம்பிச்சு, அது எங்க எங்க போய், கடைசில ஒரு முடிவுக்கு வருவோமே அதுக்கு தான் நானும் வந்து சேர்ந்தேன்- உனக்கு தீரத ஒரு நோய் இருக்கு, காயு! அப்படினு எனக்கு நானே self-diagnosis பண்ணிகிட்டேன்.

அதுக்கு அப்பரம், ரெண்டு வாரம் கண்ணாடி முன்னாடி நின்னு அழுவேன். ராத்திரி தூங்கும்போது, ஒரு extra அரை மணி நேரம் அழுவேன். ரெண்டு வாரம் கழிச்சு, கண்ணாடி முன்னாடி நின்ன போது, அந்த ரெண்டு கேள்வி தோணுச்சு.

"சொட்டையா இருக்கறதுனால, என்ன பிரச்சனை? யாருக்கு பிரச்சனை?"

ரொம்ப நேரம் யோசிச்ச பிறகு, பதில்- ஒன்னுமே இல்ல.

அப்பரம் எதுக்கு நான் இவ்வளவு feel ஆனேனு தெரியல.

மயிர் தான் பொண்ணுக்கு அழகா?

முதல் விஷயம்- ஏன் முடி கொட்டுது? ஏன் சொட்டையா போகுது?

மன உளைச்சல், உடல் ஆரோக்கியம். இது தான் மூல காரணம். இத control பண்ண முடியுமா?

overnightல முடியாட்டிகூட ஓரளவுக்கு முடியும். அதுக்கு ஏதாச்சு முயற்சி பண்ணலாம்.

அப்பரம், chef தாமோதிரன் கடாய் மாதிரி, நம்ம தலையில கருவேப்பில, வெளக்கெண்ண, அந்த தூள் இந்த தூள்னு மண்டைய மசாலா அரைக்குற மிஷின் மாதிரி ஆக்கிடுவோம் ஒரு ஏக்கத்துல, எப்படியாச்சும் முடி வளர்ந்திடாதானு.

நானும் கொஞ்ச நாள், கருவேப்பில மேட்டர் முயற்சி பண்ணி பாத்தேன். ஒரு 0.5% improve ஆகி இருக்கும். அப்பகூட மனசு ஏத்துக்காது! மறுபடியும் சோகமா ஆயிடும். அப்பரம் வேற எதையாச்சும் தேட தோணும். Dermatologist போய் பாத்தேன். அவர் ஒரு spray கொடுத்தார். அத சில மாசம் try பண்ணி பாத்தேன். இன்னொரு 0.2% improve ஆகி இருக்கும்.

இத முழுசா சரி பண்ண முடியாது- அது தான் உண்மை. அந்த உண்மைய ஏத்துக்கனும்.  மனசு ஏத்துக்க கொஞ்சம் நாள் ஆகும்.



ஆனா, இது பிரச்சனை கிடையாது. முதல 'முடி கொட்டும் பிரச்சனை'னு எழுதி இருப்பேன். அதுவே தப்பு தான். இதுல என்ன பிரச்சனை இருக்கு?


பொண்ணுக்கு முடி தான் அழகு, ஆறடி கூந்தல் பெண் அப்படி இப்படினு வர்ணிச்சு வச்சதுனால, நமக்கு முடி இல்லனே வந்தவுடனே ஒரு மாதிரியா ஆயிடுறோம்.

நமக்கு எது ஒன்னு இல்லையோ, அத குறையாவே பாக்க கத்து கொடுத்து கெடுத்து வச்சு இருக்கு, இந்த சமுதாயம்.

படிப்பு இல்லையா?- ஐயோ பாவம்.
வேலை இல்லையா?- ஐயோ பாவம்.
வீடு இல்லையா?- ஐயோ பாவம்.
கார் இல்லையா?- ஐயோ பாவம்
கல்யாணம் ஆகலயா?- ஐயோ பாவம்.
புள்ள இல்லையா- ஐயோ பாவம்
முடி இல்லையா?- ஐயோ பாவம்.

ஆனா, ஒரே ஒரு விஷயத்துக்கு தான் நம்ம பாவம் பாக்குறது இல்ல.

மூளை இல்லதாவன் கிட்ட.
இப்படி மூள இல்லாதவன் தான் வந்து எவனாச்சு உங்க தலைமுடிய பாத்து, "ஐயோ என்ன சொட்ட விழுது" னு கேட்பான். அப்படி கேட்டா,

கபாலி ரஜினி மாதிரி கால் மேல கால் போட்டு,

"ஆமாண்டா, எனக்கு முடி இருந்துச்சு. இப்ப இல்ல. உனக்கு என்ன டா பிரச்சனை"னு சொல்லி பாருங்க,

அந்து கெத்தே தனி கெத்து தான்.



உங்க அழகு, உங்க மனசுலயும், தைரியத்தலயும் தான் இருக்குது.

மத்தது எல்லாம், வெறும் மயிர் தான்!

No comments: